இம்பாக்ட் வீரர்: விதிமுறை சொல்வது என்ன?

March 30, 2023

இந்த வருட ஐபிஎல் போட்டி பல விதங்களிலும் முன்பு போல இருக்காது.

முக்கியக் காரணம், எந்த ஓர் ஆட்டமாக இருந்தாலும் 11 பேர் மட்டுமே ஓர் அணிக்காக விளையாட முடியும். இந்த வருடம் முதல் 12 வீரர்களுடன் விளையாட அணிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் கூடுதல் பலத்துடன் களமிறங்கவுள்ளன.

ஐபிஎல் போட்டியில் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதில் என்னதான் நடக்கும், இம்பாக்ட் வீரரின் தாக்கம் ஆட்டத்தில் எப்படியிருக்கும் என்று அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.

இந்திய கிரிக்கெட்டுக்கு இம்பாக்ட் வீரர் புதிதல்ல. சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது பிசிசிஐ. ஆனால் இதன் விதிமுறை சற்று வேறாக இருந்தது. ஒவ்வொரு அணியும் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு 4 மாற்று வீரர்களின் பெயர்களை அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது அந்த வீரரை ஏதாவது ஒரு இன்னிங்ஸில் 14-வது ஓவர் முடியும் முன்பு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

சூப்பர் சப் என்கிற சொற்களை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 2005, 2006-ம் ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் சூப்பர் சப் விதிமுறை பயன்படுத்தப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட ஒரு வீரருக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் அந்த ஒரு வீரர் பேட்டராக இருந்து அவர் ஆட்டமிழந்துவிட்டால் சூப்பர் சப் வீரரால் பேட்டிங் செய்ய முடியாது. சரி, சூப்பர் சப் வீரரைப் பந்துவீச்சாளருக்குப் பதிலாகக் களமிறக்கினால் என்ன ஆகும்? அந்தப் பந்துவீச்சாளர் எவ்வளவு ஓவர்களை வீசி முடித்துள்ளாரோ அதிலிருந்து மீதமுள்ள ஓவர்களை மட்டுமே சூப்பர் சப் வீரரால் வீச முடியும்.

ஆஸ்திரேலியாவின் பிபிஎல் டி20 லீக் போட்டியில் எக்ஸ் ஃபேக்டர் என்கிற ஒரு விதிமுறை அமலில் இருந்ததை அறிவீர்கள். இது கிட்டத்தட்ட சூப்பர் சப் போலத்தான். மாற்று வீரரை 10-வது ஓவரில் அதுவும் முதல் இன்னிங்ஸில் சேர்த்துக்கொள்ளலாம். எந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரர் உள்ளே வருகிறாரோ, அந்த வீரர் பந்துவீச்சில் ஒரு ஓவருக்கு மேல் ஈடுபட்டிருக்கக் கூடாது, பேட்டிங் செய்திருக்கக் கூடாது. இதில் உள்ள கட்டுப்பாடுகளை அணிகள் விரும்பவில்லை. இதனால் செயலிழந்து போய், எக்ஸ் ஃபேக்டர் விதிமுறை கடந்த வருடம் முற்றிலுமாக நீக்கப்பட்டது.

சூப்பர் சப், எக்ஸ் ஃபேக்டர், சையத் முஷ்டாக் அலி போட்டியின் இம்பாக்ட் வீரர் என இதற்கு முந்தைய உதாரணங்களை மனத்தில் வைத்துக்கொண்டு இம்பாக்ட் வீரர் என்கிற புதிய விதிமுறையை இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து அமல்படுத்துகிறது பிசிசிஐ.

இம்பாக்ட் வீரருக்கான விதிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்கள்:

டாஸ் நிகழ்வின்போது ஒவ்வொரு அணியும் கூடுதலாக 4 வீரர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். இந்த 4 பேரில் ஒருவர் இம்பாக்ட் வீரராகக் களமிறங்கலாம். இதில் பலரும் அறியாத சேதி, 4 வீரர்களும் இந்திய வீரர்களாக மட்டுமே இருக்க வேண்டும். அல்லது 3 வெளிநாட்டு வீரர்களை மட்டும் ஓர் அணி தேர்வு செய்திருந்தால் இன்னொரு வெளிநாட்டு வீரரை இம்பாக்ட் வீரராகத் தேர்வு செய்துகொள்ளலாம். இதனால் இந்த ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்.

மாற்று வீரர் எப்போது வேண்டுமானாலும் களமிறங்கலாம். எந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரர் உள்ளே நுழைகிறாரோ, அதன்பிறகு அந்த வீரரால் ஆட்டத்தில் எவ்விதத்திலும் பங்கேற்க முடியாது.

மாற்று வீரர் அணியில் இடம்பெற்றாலும் 12 பேர் பேட்டிங் செய்துவிட முடியாது. அதே 11 பேர் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும்.

பந்துவீச்சில் கூடுதல் செளகரியம். உதாரணத்துக்கு சிஎஸ்கேவின் தீபக் சஹார் முதல் 10 ஓவர்களிலேயே (வழக்கம் போல) 4 ஓவர்களை வீசி விடுகிறார். எனில் அவரை வெளியேற்றி விட்டு புதிய பந்துவீச்சாளரை இம்பாக்ட் வீரராக தோனி களமிறக்கலாம். அவரும் 4 ஓவர்களை வீசலாம். இதனால் ஒரு வீரர் மோசமாகப் பந்துவீசினால் அந்நிலைமையைச் சமாளிக்க இம்பாக்ட் வீரர் கேப்டனுக்கு உதவுவார்.

டாஸ் வெல்லும் அணிக்குக் கிடைக்கும் சலுகை, ஒரு வீரர் காயமடைந்தால் அணிக்கு ஏற்படும் பின்னடைவு போன்றவற்றை இம்பாக்ட் வீரரைக் கொண்டு எதிர்கொள்ளலாம். பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கூடுதலாக ஒரு வீரர் கிடைப்பது என்பது எவ்வளவு பெரிய பாக்கியம். இதனால் எந்தவொரு சிக்கலையும் சமாளிக்க அணிக்குக் கூடுதல் மனவுறுதி கிடைக்கும்.

சரி, இம்பாக்ட் வீரர் விதிமுறையை எந்த கேப்டன் வெற்றிகரமாகக் கையாள்வார்? தோனியா அல்லது ரோஹித் சர்மாவா? அல்லது நாம் எதிர்பார்க்காத ஒரு கேப்டனா?

Disclaimer: This news is auto-aggregated by a computer program and has not been created or edited by Cricday. Source Link