கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியின் முதல் பகுதியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த அணியின் புதிய கேப்டன் யார் என்கிற கேள்வி ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய பேட்டர் ஸ்ரேயஸ் ஐயர் முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் அவர் விலகினார். தற்போது பிசிசிஐ மருத்துவ நிபுணர்களின் நேரடி மேற்பார்வையில் உள்ள ஸ்ரேயஸ், காயம் தொடர்பாக லண்டனைச் சேர்ந்த முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை நிபுணரிடமும் கலந்து ஆலோசித்து உள்ளார்.
ஐபிஎல் - உலககோப்பை தொடர்களை மனதில் வைத்து அறுவை சிகிச்சை தற்போதைக்கு வேண்டாம் என்கிற முடிவுக்கு ஷ்ரேயஸ் ஐயர் வந்துள்ளார். ஆயுர்வேதம் உள்ளிட்ட மாற்று மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து அவர் பிசிசிஐ உடன் ஆலோசித்து வருகிறார். ஐபிஎல் போட்டியின் முதல் பாதி ஆட்டங்களில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து சுனில் நரைன், நிதிஷ் ராணா இருவரில் ஒருவர் இடைக்கால கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐஎல்டி20 போட்டியில் அபு தாபி நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நரைன் பணியாற்றினார். 6 அணிகள் பங்கேற்ற அப்போட்டியில் நரைனின் அணி கடைசி இடத்தைப் பிடித்தது. சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தில்லி அணியின் கேப்டனாக 12 ஆட்டங்களுக்குத் தலைமை வகித்த நிதிஷ் ராணா, 8 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
2022 ஐபிஎல் போட்டியில் கேகேஆர் அணி 14 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தைப் பிடித்தது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மெக்குல்லம் நியமிக்கப்பட்டதையடுத்து கேகேஆர் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அவர் விலகினார். இதையடுத்து கேகேஆர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நட்சத்திர வீரரும் கேப்டனுமான ஸ்ரேயஸ் ஐயர் இல்லாதது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.